ராஃபா: காஸாவில் இஸ்ரேலிய தாக்குதலால் அழிக்கப்பட்ட ஒரு பள்ளிவாசலுக்கு வெளியே இவ்வாண்டு ரமலான் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை (மார்ச் 15) பிரார்த்தனையில் பாலஸ்தீனர்கள் ஈடுபட்டனர்.
ராஃபா நகரில் அழிந்துபோன அல்-ஃபரூக் பள்ளிவாசலுக்கு வெளியே பக்தர்கள் பலர் ஒன்றுகூடி பிரார்த்தனை செய்தனர். இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்ட அல்லது சேதமடைந்த நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்களில் இதுவும் ஒன்று என ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
‘அல்-ஃபருக் மாஸ்க்’ என்ற வார்த்தைகள் ஒரு சாலையில் எழுப்பப்பட்ட கூரை ஒன்றின் வெளியே சாயமிடப்பட்டிருந்தன. அங்குதான் பக்தர்கள் தற்காலிகமாகப் பிரார்த்தனை மேற்கொண்டனர்.
இஸ்ரேலியத் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் ராஃபாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். போரில் காஸாவின் பெரும்பாலான பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளதால் இந்நிலை உருவாகியிருக்கிறது.
கூடாரங்கள், அழிந்துபோன பள்ளிவாசல்கள், சாலைகள் ஆகியவற்றில் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருவதாக ராஃபாவில் தஞ்சம் புகுந்தோரில் ஒருவரான வழக்கறிஞர் அபு ஜெஹாட் கூறினார்.
சென்ற வாரத் தொடக்கத்தில் இவ்வாண்டின் ரமலான் மாதம் தொடங்கியது. அதை முன்னிட்டு இஸ்ரேல்-ஹமாஸ் போரைத் தற்காலிகமாக நிறுத்த அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படவில்லை.
இஸ்ரேலிய தாக்குதல்களால் 223 பள்ளிவாசல்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பு நடத்தும் காஸா அரசாங்கம் தெரிவித்தது. மேலும் 289 பள்ளிவாசல்கள் பாதி அளவில் அழிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.
இஸ்ரேலிய தாக்குதல்களால் மூன்று தேவாலயங்கள் அழிந்துபோனதாகவும் தெரிவிக்கப்பட்டது.
காஸாவில் ரமலான் மாதத்தில் நடைபெற்ற முதல் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை குறித்து இஸ்ரேலிய ராணுவத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு ராணுவம் இன்னும் பதிலளிக்கவில்லை.