தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) 4,571 புதிய வீடுகளை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) இன்று விற்பனைக்கு விட்டுள்ளது.
அத்துடன், முந்தைய விற்பனை நடவடிக்கைகளில் விற்கப்படாமல் மீதியிருக்கும் 3,599 வீடுகளும் மீண்டும் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.
இந்த எஞ்சிய வீடுகள் பீஷான், கிளமெண்டி உள்ளிட்ட முதிர்ச்சியடைந்த, முதிர்ச்சி அடையாத பேட்டைகளில் அமைந்துள்ளன.
ஒட்டுமொத்தமாக, 8,170 வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளதால் இந்த ஆண்டின் ஆகப் பெரிய வீவக ‘பிடிஓ’ வீட்டு விற்பனை அறிமுக நடவடிக்கையாக இது கூறப்படுகிறது.
புதிதாக விற்பனைக்கு வந்துள்ள வீடுகளில் பெரும்பாலானவை ‘வன நகரமான’ தெங்காவில் அமைந்துள்ளன. எஞ்சிய வீடுகள் அங் மோ கியோ, தெம்பனிஸ் ஆகிய முதிர்ச்சியடைந்த பேட்டைகளில் கட்டப்பட்டுள்ளன.