போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டனை விதிப்பது சிங்கப்பூரின் உரிமை. சிங்கப்பூர் சட்டங்கள் வழங்கும் இந்த உரிமையை மற்ற நாடுகள் மதித்து நடக்க வேண்டும் என்று உள்துறை, சட்ட அமைச்சுகள் நேற்று வெளியிட்ட கூட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தன.
மலேசிய பிரதமர் அலுவலக அமைச்சரான லியூ வுய் கியோங் அண்மையில் சிங்கப்பூரில் போதைப் பொருள் குற்றங்களுக்காக மலேசிய நாட்டவர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்ததை அடுத்து சட்ட, உள்துறை அமைச்சுகள் நேற்று இந்த அறிக்கையை வெளியிட்டன.
மலேசியாவைச் சேர்ந்த அப்துல் ஹெல்மி அப்துல் ஹலிம் என்பவர் சிங்கப்பூர் அதிபரிடம் சமர்ப்பித்த கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின், இன்று (நவம்பர் 22) அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
போதைப் பொருளுக்கு அடிமையான கிட்டத்தட்ட 200 பேர் ஏறக்குறைய ஒருவார காலத்துக்கு தேவையான ஹெராயினை அவர் கடத்தி வந்ததாக அமைச்சுகள் வெளியிட்ட அறிக்கை விளக்கியது.
அவர் மீதான குற்றச்சாட்டு முழு அளவிலான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவருக்குத் தேவையான சட்ட உதவிகள் வழங்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மலேசிய அமைச்சர் லியூ, போதைப் பொருள் பிரச்சினையை கட்டுக்குள் கொண்டுவர போதைப் பொருள் கடத்தல் மன்னர்களும் அதன் உண்மையான உரிமையாளர்களும் சட்டத்தின் கடுமையை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்ததை அறிக்கை நினைவுகூர்ந்ததது.
இதற்குப் பதிலாக, “போதைப் பொருளுக்கு எதிராக இரு நாடுகளும் மேற்கொண்டுவரும் பொதுவான போராட்டத்திற்கு உதவும் வகையில் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு போதைப் பொருள்களை அனுப்பும் போதைப் பொருள் கடத்தல் மன்னர்களை ஒழித்திட வேண்டும்,” என்று அறிக்கை தெரிவித்தது. அத்துடன், சிங்கப்பூருக்குள் போதைப் பொருள் கடத்தி வருவதற்கு மலேசியாவில் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதற்கு எதிராக கடுமையான எடுக்கவும் மலேசியா உதவலாம் என்று அறிக்கை தெளிவுபடுத்தியது.
“இவ்வாறு செய்தால், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடக்கூடிய நபர்களை மலேசியர்கள் காப்பாற்ற உதவலாம். போதைப் பொருள் கடத்தல்காரர்கள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு சிங்கப்பூரில் பலருக்கு மரணத்தையும் ஆறாத் துயரத்தையும் தருவதுடன் பல்லாயிரம் சிங்கப்பூரர்களின் வாழ்க்கையையும் நாசப்படுத்துகின்றனர்,” என்று அறிக்கை தெரிவித்தது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity