இந்த மாதம் 29ஆம் தேதியிலிருந்து மலேசியாவில் இருந்து சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போர் என 1,440 பேர் வரை உட்லண்ட்ஸ் கடற்பாலம் வழியாக தினமும் சிங்கப்பூருக்கு வர முடியும்.
பிரத்தியேக பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்தி அவர்கள் இங்கு வந்திறங்கியவுடன், தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.
அதேபோல, சிங்கப்பூரில் இருந்து மலேசியர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போர் என 1,440 பேர் வரை மலேசியாவுக்குச் செல்ல முடியும்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவழி தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தின் (விடிஎல்) ஒரு பகுதியாக இந்த ஏற்பாடு அமைகிறது.
இதன்கீழ் இயங்கும் பிரத்தியேக பேருந்துச் சேவைகளுக்கான பேருந்துப் பயணச் சீட்டுகள் நாளை வியாழக்கிழமை (நவம்பர் 25) காலை 8 மணிக்கு விற்பனைக்கு விடப்படும்.
சிங்கப்பூரில் இருந்து மலேசியா செல்வதற்கான பேருந்துப் பயணச் சீட்டுகள் பெரியவர்களுக்கு $15க்கும் சிறுவர்களுக்கு $8க்கும் விற்கப்படும். மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் வருவதற்கான பேருந்துப் பயணச் சீட்டுகள் பெரியவர்களுக்கு 20 ரிங்கிட்டுக்கும் சிறுவர்களுக்கு 10 ரிங்கிட்டுக்கும் விற்கப்படும்.
நிலவழி ‘விடிஎல்’ திட்டத்தின்கீழ் பயணம் செய்வோர், தாங்கள் செல்லவிருக்கும் நாட்டின் குடிமக்களாகவோ நிரந்தரவாசிகளாகவோ நீண்டகால அனுமதி அட்டைதாரர்களாகவோ இருக்க வேண்டும்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிங்கப்பூர்-மலேசியா நில எல்லைகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, தத்தம் நாடுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களைப் பிரிந்து வாழும் ஊழியர்கள், அவர்களை மீண்டும் சந்திக்க இந்த ஏற்பாடு முன்னுரிமை அளிக்கிறது.