கட்டுமானம், கப்பல் பட்டறை, பதனீட்டுத் தொழில்துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தங்களுடைய திட்டங்கள் ஒரு சில மாதங்கள் தாமதமடையலாம் என்று எதிர்பார்க்கின்றன.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் திட்டம் வழி எஸ் பாஸ், வேலை அனுமதிச்சீட்டு ஊழியர்கள் வேலை பார்க்க சிங்கப்பூர் வருவதற்கு வகை செய்யும் புதிய விண்ணப்பங்களை இந்தத் துறைகளைச் சேர்ந்த முதலாளிகள் தாக்கல் செய்ய முடியாது என்ற புதிய கட்டுப்பாடு நடப்புக்கு வந்திருப்பதே இதற்கான காரணம்.
மனிதவள அமைச்சு டிசம்பர் 4ஆம் தேதி இந்தப் புதிய கட்டுப்பாடு பற்றி அறிவித்தது.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளைச் சேர்ந்த வேலை அனுமதிதாரர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும்.
தாங்கள் ஊழியர் பற்றாக்குறையை எதிர்நோக்குவதால் இப்போதைய அல்லது இடம்பெறவிருக்கின்ற கட்டுமானத் திட்டங்களுக்கான கால அளவை நிர்ணயிப்பது சிரமமாக இருக்கிறது என்று நிறுவனங்கள் தன்னிடம் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
புதிய கட்டுப்பாடுகள் காரணமாக தனது நிறுவனத்தின் புதிய திட்டங்களில் 90 விழுக்காடு இரண்டு முதல் மூன்று மாத காலம் தாமதமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ‘ஹிட்டோமோ கன்ஸ்ட்ரக்ஷன்’ என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான திருவாட்டி செரின் பான் கூறினார்.
கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக தன்னுடைய நிறுவனம் ஊழியர் பற்றாக்குறையை எதிர்நோக்குகிறது என்று ‘ஸ்டார்சிட்டி கன்ஸ்ட்ரக்ஷன்’ என்ற நிறுவனத்தின் இயக்குநர் ஸு சாங்செங் தெரிவித்தார்.
தன் நிறுவனத்தின் மூன்று கட்டுமானத் திட்டங்கள் மூன்று மாதங்கள் முதல் ஓராண்டு வரை தாமதடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இவர் கூறினார்.
சிங்கப்பூர் கட்டுமான ஒப்பந்தக்காரர்கள் லிமிடெட் (Scal) அமைப்பின் நிர்வாக இயக்குநரான திருவாட்டி லூயிஸ் சுவா, ஆகப் புதிய மாற்றங்களைக் கருத்தில்கொண்டு அதிகாரிகள் ஊழியர்களின் எண் ணிக்கை வரம்பு அளவை உயர்த்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சிங்கப்பூர் தொழில்துறைக் கூட்டமைப்பின் தலைமை நிர்வாகி லாம் யி யுங், தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயண ஏற்பாடு விரைவில் வெளிநாட்டு ஊழியர்களை அனுமதிக்கும் என்று நிறுவனங்கள் நம்புவதாகக் கூறினார்.
இதனிடையே, ‘பீப்பிள் வேர்ல்ட் வைட் கன்சல்டிங்’ என்ற ஊழியர்வள நிறுவனத்தின் நிர்வாக இயக்கு நரான டாக்டர் டேவிட் லியோங், ஓமிக்ரான் கிருமி தலைதூக்கி இருப்பதால் தொற்றைத் தவிர்த்துக்கொள்ள கடுமையான விதிமுறைகள் தேவை என்று கருத்து தெரிவித்தார்.