அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாண்டவர்களில் ஒருவர் மற்ற மூவரை சுட்ட துப்பாக்கிக்காரன். துப்பாக்கி வைத்திருந்த ஒரு வழிப்போக்கர் அவரை சுட்டுக் கொன்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
மேலும் இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சீரான நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டது. காயமடைந்தவர்களில் ஒருவர் 12 வயது சிறுமி.
ஒரு கடைத்தொகுதிக்குள் நுழைந்த துப்பாக்கிக்காரன் கண்மண் தெரியாமல் சுட ஆரம்பித்ததாகக் கூறப்பட்டது. துப்பாக்கிக்காரனின் அடையாளமோ தாக்குதலுக்கான நோக்கம் குறித்தோ காவல் துறையினர் தகவல் அளிக்கவில்லை.
துப்பாக்கிக்காரனை சுட்டவர் 22 வயது ஆடவர் எனத் தெரிவிக்கப்பட்டது. அவர் துப்பாக்கி வைத்திருக்க அனுமதி பெற்றிருந்ததாகக் கூறப்பட்டது.
அவருடைய செயலை பாராட்டிய காவல் துறையினர், துப்பாக்கிக்காரனை அவர் சுடவில்லையென்றால் பலர் மடிந்திருக்கக்கூடும் எனக் குறிப்பிட்டனர்.