திரைப்பட நுழைவுச்சீட்டுகளை வாங்கி தரகுத் தொகை ஈட்டலாம் என்று சொல்லி மக்களை ஏமாற்றும் ஒரு மோசடி மறுபடியும் தலைகாட்டி இருக்கிறது.
அத்தகைய மோசடிகள் பற்றி ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் தங்களுக்கு 17 புகார்கள் வந்திருப்பதாக காவல்துறை அறிக்கை ஒன்றில் சனிக்கிழமை (ஏப்ரல் 9) தெரிவித்தது.
அந்த மோசடிகளில் குறைந்தபட்சம் $209,000 தொகையைப் பாதிக்கப்பட்டவர்கள் இழந்து இருக்கிறார்கள்.
மோசடிப்பேர்வழிகள் இணையத்தில் சந்தை நிறுவனங்கள்போல நடிப்பார்கள்.
இணையத்தளத்திற்குச் சென்று ஒரு கணக்கைத் தொடங்கும்படி மக்களை அவர்கள் கேட்டுக்கொள்வார்கள்.
இன்னாரென்று தெரியாதவர்களின் வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்பி நுழைவுச்சீட்டுகளை வாங்கும்படி மோசடிப்பேர்வழிகள் கேட்டுக்கொள்வார்கள்.
எல்லாம் சட்டபூர்வ செயல் என்றும் இப்படி நுழைவுச்சீட்டை வாங்குவதால் கிடைக்கும் தரகுத்தொகை எவ்வளவு என்பதை பயனீட்டாளர் தங்கள் கணக்கைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்றும் கூறி மக்களை மோசடிக்காரர்கள் வசிப்படுத்திவிடுவார்கள்.
விலை அதிக நுழைவுச்சீட்டுகளை வாங்கும்படி பிறகு அவர்கள் கேட்டுக்கொள்வார்கள். தங்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ள முடியாமல் போகும்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரியவரும்.
மோசடிப்பேர்வழிகளின் இத்தகைய வலையில் விழ வேண்டாம்; சந்தேகத்திற்குரிய செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் பொதுமக்களை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.