கொரோனா கிருமித்தொற்றின் தாக்கம் ஊடக வர்த்தகத்தின் மீதும் உள்ள நிலையில், சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) தொடர்ந்து ஊடக வர்த்தக உருமாற்றத்திற்காக முதலீடு செய்யும் என்று தெரிவித்துள்ளது.
இந்த உருமாற்றம் பயனாளரின் மாறிவரும் பாணிக்கு ஏற்ப அமைந்திடும் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாகி இங் யாட் சுங் நேற்று நடைபெற்ற வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கூறினார். நிறுவனத்திடம் உள்ள சொத்துப் பிரிவுகளால் கிடைக்கும் வருமானத்தில் தொடர்ந்து வளர்ச்சி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“சவால்மிக்க நிலையை எஸ்பிஎச் தற்போது சந்தித்து வருகிறது. எங்கும் உள்ள செய்தி ஊடகத் துறையில் தடைகளாக ஏற்பட்டு வரும் துரித மாற்றங்கள் நம்மையும் விட்டுவைக்கவில்லை. பயனாளர்களின் பழக்கவழக்கங்கள் மாறுகின்றன. அத்துடன் மேலும் அதிகமானோர் மின்னிலக்க ஊடகத்திற்கு மாறி வருகின்றனர்.
“இதனால் அச்சு ஊடகம் தொடர்பிலான விளம்பரப் பிரிவிலும் சந்தாதாரர் வருவாயிலும் நிலையான ஒரு சரிவை நம் ஊடக வர்த்தகம் சந்தித்து வருகிறது. வழக்கமாக நமது ஆகப்பெரிய வருவாய் மற்றும் லாப காரணிகள் இவை. ஆனால் இவ்வாண்டு கொவிட்-19 கொள்ளை நோய் இச்சவால்களை மேலும் மோசமாக்கிவிட்டது,” என்று திரு இங் தெரிவித்தார்.
அடுத்த நிலைக்கு முன்னேறும் பொருட்டு நிறுவனம் அதன் சொத்துப் பிரிவிலிருந்து கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்கச் செய்யும் உத்தியைக் கையாளும் என்றார் அவர். தொழில்நுட்ப ஆற்றல்களுக்குப் புத்துயிர் ஊட்டுவது, புதுப்பிப்பது போன்ற ஊடக உருமாற்ற முயற்சியிலும் தொடர்ந்து நிறுவனம் நாட்டம் செலுத்தும் என்று கூறப்பட்டது.