ஜூரோங்கில் போலிஸ் வேனுக்கும் லாரிக்கும் இடையே நேற்று (மே 7) இரவு ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்த ஐந்து போலிஸ் அதிகாரிகள் உட்பட 17 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஜாலான் புரோ, ஜூரோங் போர்ட் சாலைச் சந்திப்பில் ஏற்பட்ட விபத்து குறித்து இரவு 9 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது.
ஐந்து போலிஸ் அதிகாரிகள், ஓர் ஆண் லாரி ஓட்டுநர், லாரியில் இருந்த 11 ஆண் பயணிகள் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர்கள் சுயநினைவுடன் இருந்ததாக போலிஸ் கூறியது.
“அந்த 17 ஆடவர்களும் 20க்கும் 44 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். விபத்து குறித்த போலிஸ் விசாரணை தொடர்கிறது,” என்று போலிஸ் கூறியது.
சமூக ஊடகத்தில் பரவி வரும் காணொளி ஒன்றில், லாரியின் முன்கண்ணாடி நொறுங்கியிருப்பதைக் காண முடிந்தது. சாலையில் கண்ணாடித் துண்டுகள் சிதறிக் கிடந்தன. போலிஸ் வேனின் இடதுபுறமும் மோசமாக சேதமடைந்து காணப்பட்டது.