கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த மேலும் கடுமையான நடவடிக்கைகள் அமலாகும் என்று மலேசியா நேற்று (மே 28) அறிவித்து இருந்தது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து சென்று வருவதை உறுதிப்படுத்த சிங்கப்பூர் மலேசியாவுடன் தொடர்ந்து அணுக்கமாகச் செயல்படும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்தார்.
என்டியுசி ஃபேர்பிரைஸ் பினாய் விநியோக நிலையத்திற்குச் சென்றிருந்தபோது அமைச்சர் இவ்வாறு கூறியதாக வர்த்தக, தொழில் அமைச்சு இன்று (மே 29) ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.
சிங்கப்பூரில் செயல்படும் முன்னணி பேரங்காடிகள் உலக சூழ்நிலையையும் வட்டார சூழ்நிலையையும் சென்ற ஆண்டு முதலே அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். தேவை எனில் விரைந்து செயல்பட்டு உணவு, அத்தியாவசிய பொருட்கள் இருப்பை அவை பலப்படுத்தி வந்துள்ளன என்றும் திரு கான் கூறினார்.
நாட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவுக்கு இருப்பதை உறுதிப்படுத்த கடுமையாகப் பாடுபடும் தளவாட போக்குவரத்து நிபுணத்துவர்கள், பேரங்காடி ஊழியர்களுக்கு அவர் நன்றி கூறினார்.