புக்கிட் மேராவில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு ஒன்றில் நான்கு பேரைக் கத்தியால் தாக்கியதாகக் கூறப்படும் 48 வயது ஆடவர் ஒருவர் இன்று (ஜூன் 6) கைது செய்யப்பட்டார். அவருக்கு மனநலப் பிரச்சினை மற்றும் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
எண் 2 புக்கிட் மேரா சாலையில் உள்ள வீவக வீடு ஒன்றில் நிகழ்ந்த இந்தத் தாக்குதலை காலை 6.06 மணிக்கு தான் கையாண்டதாக போலிஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 18 மற்றும் 24 வயதான இரு ஆடவர்களும் 39 மற்றும் 59 வயதான இரு பெண்களும் அடங்குவர். அவர்களைக் கத்தியால் தாக்கியதாகக் கூறப்படும் அந்த 48 வயது ஆடவர் அவர்களுக்கு முன்பின் தெரியாதவர் என நம்பப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் அவர் தனியாக ஈடுபட்டதாகவும் அவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாகவும் நம்பப்படுகிறது. ஆபத்தான ஆயுதம் ஒன்றைக் கொண்டு வேண்டுமென்ற கடுமையாகக் காயம் விளைவித்ததற்காக அவர் கைது செய்யப்பட்டதாக போலிஸ் கூறியது.
சம்பவம் நிகழ்ந்த இடத்தில் ஒரு கத்தி, ஒரு வெட்டுக்கத்தி, இரு பேனா கத்திகள், போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலிஸ் தெரிவித்தது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. நோயாளிகளின் ரகசியத்தன்மையை சுட்டிய அந்த மருத்துவமனை, காயமடைந்தவர்களின் நிலைமை குறித்து கருத்துரைக்க மறுத்துவிட்டது.
சம்பவம் நிகழ்ந்த புளோக்கின் கீழ்த்தளத்தில் போலிஸ் அதிகாரிகள் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 59 வயது மாது ஒருவர் அவர்களை அணுகியதாக போலிஸ் இன்று (ஜூன் 6) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது. அந்த மாது கத்திக்குத்துக் காயங்களுடன் காணப்பட்டார். பின்னர் அந்த புளோக்கின் இரண்டாவது தளத்தில் உள்ள வீட்டிற்கு அதிகாரிகள் சென்றனர்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தபோது அந்தச் சந்தேக நபர் வீட்டிற்குள் நுழைந்து பெண்கள் இருவரைக் கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த வீட்டில் இருந்த ஆண்கள் இருவர், அந்த ஆடவரை மடக்கிப் பிடிக்க முற்பட்டனர்.
வீட்டின் மற்றோர் அறையில் தூங்கிக்கொண்டிருந்த 31 வயது ஆடவர் ஒருவர், இந்தக் கலாட்டாவால் கண்விழித்து வீட்டிலிருந்து தப்பித்தார். அக்கம்பக்கத்தில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலிஸ் அதிகாரிகளிடமிருந்து உதவி பெற அவர் முற்பட்டார். அவருக்குக் காயம் ஏற்படவில்லை என போலிஸ் தெரிவித்தது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த நால்வரில் மூவருக்கு கத்திக்குத்துக் காயங்கள் ஏற்பட்டன. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தைவிட்டு தப்பிக்க படிக்கட்டுகளில் இறங்கியபோது அந்த 18 வயது ஆடவர் கீழே விழுந்தார். காயமடைந்த அந்த நால்வரில் மூவர் மலேசியர்கள். அந்த 39 வயது மாது வியட்னாம் நாட்டவர்.
இந்நிலையில், இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அந்தச் சந்தேக ஆடவருக்குக் குற்றப் பின்னணி உள்ளது. 1991 முதல், பல்வேறு போதைப்பொருள் குற்றங்களை அவர் புரிந்ததாக போலிஸ் தெரிவித்தது. கடைசியாக அவர் புரிந்திருந்த போதைப்பொருள் குற்றத்திற்கான தண்டனை முடிந்த பிறகு, கடந்த ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த புளோக் அமைந்திருக்கும் பகுதியில் சுற்றுக்காவல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போலிஸ் தெரிவித்தது.