சிங்கப்பூரில் ஃபைசர் பயோஎன்டெக்/கமிர்னட்டி தடுப்பூசியைப் போட்டுக்கொள்பவர்கள் நான்கு வாரங்களுக்குப் பதிலாக மூன்றே வாரங்களில் இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முடியும்.
அந்தத் தடுப்பூசியைத் தயாரிக்கும் நிறுவனங்களின் பரிந்துரையின் பேரில் இந்த அனுமதி கிடைத்துள்ளது.
ஆகஸ்ட் 9ஆம் தேதி தேசிய தின வாக்கில் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு முற்றிலும் தடுப்பூசியைப் போட்டுவிட வேண்டும் என்று அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதைச் சாதிக்கும் வகையில் அது தடுப்பூசி இயக்கத்தை வேகப்படுத்தி இருக்கிறது.
மொடர்னா தடுப்பூசி போட்டுக்கொள்வோரைப் பொறுத்தவரை, இந்த மாற்றம் அவர்களுக்குப் பொருந்தாது. மொடர்னா தடுப்பூசி போட்டுக்கொள்வோர் இரண்டாவது தடுப்பூசிக்கு நான்கு வாரங்கள் காத்து இருக்க வேண்டும். ஃபைசர் இரண்டாவது தடுப்பூசியை மூன்று வாரங்களில் போட்டுக்கொள்ளும் ஏற்பாடு வெள்ளிக்கிழமை முதல் நடப்புக்கு வந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.