சிங்கப்பூரில் இரண்டாவது கொவிட்-19 மாத்திரைக்கு இடைக்கால அங்கீகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இலேசானது முதல் மிதமான கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 18 மற்றும் அதற்குமேல் வயதுடையோருக்குச் சிகிச்சை அளிக்க ‘மோல்னுபிரவிர்’ எனும் அம்மாத்திரையைப் பயன்படுத்தலாம்.
‘மெர்க்’ நிறுவனத்தின் தயாரிப்பான அம்மாத்திரை ‘லெகெவ்ரியோ (Lagevrio)’ எனும் பெயரில் விற்கப்படும்.
கிருமிப்பரவல் காலகட்டத்திற்கான சிறப்பு நடைமுறையின்கீழ் ‘மோல்னுபிரவிர்’ மாத்திரைக்கு இடைக்கால அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடுமையான கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயமிருப்பினும் மருத்துவ ரீதியில் வேறு பொருத்தமான கொவிட்-19 சிகிச்சைத் தெரிவுகள் இல்லாத பட்சத்திலும் அம்மாத்திரையைப் பயன்படுத்தலாம் என்று ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அறிகுறிகள் தென்பட்ட ஐந்து நாள்களுக்குள் அம்மாத்திரை கொடுக்கப்பட வேண்டும். ஐந்து நாள்களுக்குமேல் அதனை உட்கொள்ளக்கூடாது.
கர்ப்பிணிகள், தாய்ப்பாலூட்டும் பெண்கள், 18 வயதிற்குக் குறைந்தோர் ஆகியோருக்கு ‘மோல்னுபிரவிர்’ மாத்திரை பரிந்துரைக்கப்படவில்லை.
பொதுவாக, இம்மாத்திரையை உட்கொள்வோரிடத்தில் இலேசான வயிற்றுப்போக்கு, குமட்டல், தலைச்சுற்றல் உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்பதை மருத்துவ ஆய்வுகள் காட்டுவதாக ஆணையம் குறிப்பிட்டது.