நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த விவாதத்தின்போது பாலியல் வன்முறைச் சம்பவம் குறித்து பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் பொய்யுரைத்திருந்தார்.
ஒரு வாரம் கழித்து, தாம் பொய் கூறியிருந்தது பற்றி பாட்டாளிக் கட்சித் தலைவர்களிடம் அவர் தெரிவித்தும் இருந்தார்.
இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பில் ரயீசா கானுக்கு அவகாசம் கொடுக்க கட்சித் தலைவர்கள் முடிவெடுத்ததாக இன்று (டிசம்பர் 2) பாட்டாளிக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறப்பட்டது.
தாமும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக ரயீசா கான் கூறியதையும் அவரின் குடும்பத்தாருக்கு அதுகுறித்து தெரியாததையும் கருத்தில்கொண்டு கட்சித் தலைவர்கள் இம்முடிவை எடுத்ததாக பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து கடந்த அக்டோபர் மாதம் நடந்த நாடாளுமன்ற அமர்வில் ரயீசா கான் தெளிவுபடுத்துவதாக இருந்தது. இருப்பினும், அவர் அவ்வாறு செய்யாமல் உண்மை அல்லாத தகவல்களை மீண்டும் மீண்டும் கூறியிருந்தார்.
அத்தகவல்கள், பாட்டாளிக் கட்சியின் தலைவர்களான திரு சிங், சில்வியா லிம், ஃபைசல் மனாப் ஆகியோரிடம் கூறியதற்குப் புறம்பாக இருந்தன.
நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் பாட்டாளிக் கட்சியிலிருந்தும் ரயீசா கான் விலகுவதாக அக்கட்சி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்தப் பெண்ணுடன் தொடர்புகொள்ள அல்லது அதில் சம்பந்தப்பட்ட நபர்களுடன் தொடர்புகொள்ள முயற்சி செய்யுமாறு ரயீசா கானிடம் தாம் அறிவுறுத்தியிருந்ததாக திரு சிங் குறிப்பிட்டார்.
“ஆரம்பத்தில் ரயீசா என்னிடம் உண்மை அல்லாத தகவல்களையே கூறினார்.
“பலமுறை வற்புறுத்திய பிறகு, பல புதிய தகவல்களும் ரயீசாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்ந்த சங்கடமான சில உண்மைகளும் தெரியவந்தன. பாலியல் துன்புறுத்தலுக்கு ரயீசா ஆளானது குறித்து அதுவரை கட்சித் தலைவர்களுக்குத் தெரியாமல் இருந்தது,” என்றார் திரு சிங்.
ரயீசா கான் அனுபவித்த பாலியல் வன்கொடுமையைப் பற்றி அவரின் குடும்பத்தார் அறிந்திடாதது, அக்கறைக்குரிய ஒன்றாக தமக்குத் தோன்றியதாகவும் அவர் சொன்னார்.
உண்மை தவறி நாடாளுமன்றத்தில் ரயீசான் கான் நடந்துகொண்டதற்குப் பின்னால் உள்ள காரணங்களை முழுமையாக வெளிப்படுத்துவதற்குமுன், அவரின் குடும்பத்திற்கு முதலில் நடந்தவை தெரியப்படுத்தப்பட வேண்டும் என்பதை திரு சிங் முக்கியமாகக் கருதினார்.
“அவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை, அவரது மனநிலை குறித்த என் மதிப்பீடு ஆகியவற்றைக் கருதி தம்முடைய குடும்பத்தாருடன் இது தொடர்பில் பேச அவருக்கு அவகாசம் வழங்க நான் தயாராக இருந்தேன்,” என்றார் திரு சிங்.
தோல்பாதிப்பு காரணத்தால் செப்டம்பரில் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் ரயீசா கான் கலந்துகொள்ளவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரான திரு சிங் குறிப்பிட்டார்.
ரயீசா கான் பதவி விலக வேண்டும் என்று பாட்டாளிக் கட்சித் தலைவர்கள் வாக்களித்ததை அடுத்து, ரயீசான் கான் பதவி விலக முடிவெடுத்தார். அவர் பதவி விலகாமல் இருந்திருந்தால், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பார் என்றார் திரு சிங்.
கட்சியின் மத்திய நிர்வாக் குழு இதுகுறித்து சந்தித்துப் பேசுவதற்குமுன், பதவி விலக தாம் முடிவெடுத்திருப்பதாக ரயீசான் கான் தமக்குத் தெரியப்படுத்தியதாக திரு சிங் கூறினார்.
ரயீசா கான் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, செங்காங் குழுத்தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்படாது என்று பாட்டாளிக் கட்சி தெரிவித்துள்ளது.
தொகுதியின் மற்ற மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணியைத் தொடர்வர் என்று கட்சித் தலைவர் சில்வியா லிம் கூறினார்.