தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மாது ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பிறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமாரா சித்தோல் என்னும் அவருக்கு ஏற்கெனவே ஆறு வயதில் இரட்டைக் குழந்தைகள் இருக்கும் நிலையில், தற்போது 10 குழந்தைகள் பிறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி பிரிட்டோரியா நகரில் உள்ள மருத்துவமனையில் அந்த மாது அனுமதிக்கப்பட்டார். நேற்று அவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் ஏழு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள் என 10 குழந்தைகள் பிறந்தன. தாயும் 10 குழந்தைகளும் நலமாக உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் மாலி நாட்டைச் சேர்ந்த மாது ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகள் பிறந்ததே தற்போது உலக சாதனையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், தமாராவுக்கு ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பிறந்திருப்பதை உறுதிப்படுத்த கின்னஸ் உலக சாதனை அமைப்பு அதன் குழுவை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில்லறை விற்பனைக் கடை மேலாளரான அந்த மாது, தாம் கர்ப்பப்பையில் சுமந்திருந்த குழந்தைகளின் நலன் குறித்து கவலையுடன் பல தூங்காத இரவுகளைக் கழித்ததாகக் கூறினார்.
“குழந்தைகள் உயிர் பிழைக்குமா? தலையிலோ, வயிற்றிலோ, கைகளிலோ அவை ஒட்டிப் பிறந்தால் என்னவாகும்? இதுபோன்ற பல கேள்விகள் என்னுள் எழுந்தன. எனினும், எனது கர்ப்பப்பை விரிவடைந்து வந்ததாக மருத்துவர் உத்தரவாதம் அளித்தார்.
கடவுள் நிகழ்த்திய அற்புதத்தால் சிக்கலின்றி எனது குழந்தைகள் கர்ப்பப்பையிலேயே இருந்தன,” என்று தமாரா கூறினார்.