ஓமானைச் சேர்ந்த இந்திய நாட்டவரான ரஞ்ஜித் வேணுகோபாலன் உன்னிதனுக்கு அடித்தது யோகம்.
நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘பிக் டிக்கெட் அபுதாபி’ மாபெரும் அதிர்ஷ்டக் குலுக்கலில் 10 மில்லியன் திர்ஹம் (S$3.73 மி.) பரிசை வென்றார் அவர்.
தம்முடைய இரண்டாவது முயற்சியிலேயே 052706 எனும் குலுக்கல் சீட்டில் அவர் முதல் பரிசை தட்டிச் சென்றார்.
“ஓமானில் கடந்த 12 ஆண்டுகளாக நான் வசித்து வருகிறேன். ஆனால், ஈராண்டுகளுக்கு முன்புதான் எனது முதல் பிக் டிக்கெட்டை வாங்கினேன். அதை வாங்கிய தேதிகூட எனக்கு நினைவில் இல்லை. பிக் டிக்கெட்டில் கணக்கைத் தொடங்க நான் பணம் செலுத்தினேன். டிக்கெட்டை வாங்க நானும் என் நண்பர்களும் சேர்ந்து பணம் செலுத்தினோம். ஆனால், அப்போது எங்களுக்கு அதிர்ஷ்டம் கிட்டவில்லை. அதற்குப் பிறகு இதில் பங்கெடுப்பதை நான் நிறுத்திக்கொண்டேன்.
“2021ஆம் ஆண்டு எனக்கு அதிர்ஷ்டம் வருமா என்பதைச் சோதித்துப் பார்க்க இரண்டாவது முறையாக நான் முயற்சி செய்தேன். அதற்குப் பலன் கிடைத்தது. இதை என்னால் நம்ப முடியவில்லை,” என்றார் இந்தியாவின் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித், 42.
பரிசுப் பணத்தை ஐந்து நண்பர்களுடன் தாம் பகிர்ந்துகொள்ளப் போவதாக அவர் சொன்னார். ரஞ்சித் பிக் டிக்கெட்டை வாங்க அவர்கள் பங்களித்து இருந்தனர்.
“என் நண்பர்கள் அனைவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். வெல்வோம் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. குலுக்கலின் நேரடி ஒளிபரப்பைக்கூட நான் பார்க்கவில்லை. தொலைபேசியில் என் நண்பர்கள் அழைத்துச் சொன்னபோதுதான் இதை நான் தெரிந்துகொண்டேன்,” என்றார் ரஞ்சித்.
திருமணமான ரஞ்சித்துக்கு ஐந்து வயதில் மகள் இருக்கிறாள். பரிசுப் பணத்தைக் கொண்டு என்ன செய்வது என்பது பற்றி தாம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றார் அவர்.
“கணக்காய்வாளராக சாதாரண வாழ்க்கையை நான் வாழ்ந்துகொண்டிருந்தேன். என் மனைவியும் மகளும் கேரளாவில் உள்ளனர்,” என்று ரஞ்சித் சொன்னார்.
இப்போதைக்கு ரஞ்சித்துக்கும் அவருடைய நண்பர்களுக்கும் கொண்டாட்டம்தான்!