இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சே நாடு திரும்ப இது சரியான தருணம் அல்ல என்று இலங்கையின் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
தி ஜுவர்னல் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் அவ்வாறு கூறினார்.
"அவர் இலங்கைக்குத் திரும்பவதற்கு இது சரியான நேரம் இல்லை என நான் நம்புகிறேன். அவர் எப்போது நாடு திரும்புவார் என்று எனக்கு எந்தவித அறிகுறியும் இல்லை," என்று அவர் சொன்னார்.
திரு ராஜபக்சே ஜூலை 13ஆம் தேதி நாட்டைவிட்டு வெளியாகி மாலத்தீவில் தஞ்சம் அடைந்தார். அங்கிருந்து சவூதி விமானம் மூலம் ஜூலை 14ஆம் தேதி சிங்கப்பூர் வந்தார்.
சிங்கப்பூரில் இருந்தபடி திரு ராஜபக்சே தமது பதவி விலகலை மின்னஞ்சல் மூலமாக இலங்கை அரசுக்கு அனுப்பி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து திரு ரணில் இலங்கையின் புதிய அதிபராக நாடாளுமன்ற வாகெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.