‘கொரோனா கிருமித் தொற்றின் தாக்கம் தெரிய 24 நாட்கள் வரை ஆகலாம்’
கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சீனாவிலுள்ள 1,000 நோயாளிகளின் தரவுகளின்படி, இந்த கிருமி ஒருவருக்குத் தொற்றியதிலிருந்து தக்கத்தை உணர்வதற்கான காலகட்டம் 24 நாட்கள் வரை இருக்கலாம் என்று புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கிருமி தொற்றிய பிறகு 24 நாட்கள்வரை அறிகுறிகள் தென்படாமல் இருப்பது மிகவும் அரிதானது என்றும் கூறப்பட்டது.
இந்தப் புதிய ஆய்வில் சீனாவின் 552 மருத்துவமனைகளில் உள்ள 1,099 கொரோனா கிருமித் தொற்று நோயாளிகள் உட்படுத்தப்பட்டனர்.
சராசரியாக (Median) 3 நாட்களுக்குள் கிருமித் தொற்றின் அறிகுறி தென்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, கிருமி தொற்றியிருந்தால் அது 14 நாட்களுக்குள் தெரிந்துவிடும் என்று கூறப்பட்டது.
மேலும், கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் குறைவானவர்கள்தான் முதலில் மருத்துவரைப் பார்த்தபோது காய்ச்சல் கண்டிருந்தனர். பலருக்குக் காய்ச்சல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 200ஆம் ஆண்டு பரவிய சார்ஸ் கொரோனா கிருமித்தொற்றைக் கண்டுபிடித்த சீன ஆய்வாளர் டாக்டர் ஸோங் நன்ஷான், அவருடன் இணைந்து செயல்படும் சுமார் 3 டஜன் ஆய்வாளார்கள், இந்தப் புதிய கொரோனா கிருமி பற்றி பல தகவல்கள் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை என்றனர்.
சார்ஸ், மெர்ஸ் கிருமிகளைப்போல இந்தப் புதிய கொரோனா கிருமி சுவாசப்பாதையிலிருந்து வரும் நீர்த்துளிகளாலும் நேரடித் தொடர்பாலும் பரவக்கூடியது.
இருப்பினும், இந்தக் கிருமிகள் வயிற்றில் சுரக்கப்படும் திரவங்களின் வாயிலாகவும் பரவக்கூடும் என்று இந்த ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். நோயால் பாதிக்கப்பட்ட சிலரது உணவுப்பாதை, எச்சில், சிறுநீர் போன்றவற்றிலும் இந்தக் கிருமிகள் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் கிருமித் தொற்றால் எத்தனை சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 1,099 பேரில் 2.09 விழுக்காட்டினர் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கணிசமான எண்ணிக்கையில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.
இந்தக் கிருமியின் தாக்கத்தால் உயிரிழப்போர் 0.88% என்று அந்த ஆய்வு குறிப்பிட்டது.
இன்றைய (பிப்ரவரி 11) நிலவரப்படி, சீனாவில் 42,600 மேற்பட்டோர் இந்தக் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,000ஐத் தாண்டியுள்ளது.
#தமிழ்முரசு #கொரோனா #24