வெளிநாட்டு ஊழியர்களுக்கான கொவிட்-19 நடைமுறைகள் கடுமையாக்கப்படுகின்றன
வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் இவ்வாரம் கண்டறியப்பட்ட புதிய கொவிட்-19 கிருமித்தொற்றுக் குழுமத்தால் வெளிநாட்டு ஊழியர்களுக்கான கொவிட்-19 கட்டுப்பாடுகள் உடனடியாக மேலும் கடுமையாக்கப்பட உள்ளன.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியிலிருந்து சமூகத்திற்கு உருமாறிய கிருமித்தொற்று பரவுவதைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கையை எடுப்பதாக கொவிட்-19 அமைச்சுகள்நிலை பணிக்குழு இன்று (ஏப்ரல் 22) தெரிவித்தது.
இருப்பினும் இந்தியாவிலிருந்து அந்தப் புதிய கொவிட்-19 கிருமிதான் வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸில் ஏற்பட்ட புதிய சம்பவங்களுக்குக் காரணம் என்று எந்த ஆதாரமும் இல்லை என்பதை பணிக்குழு வலியுறுத்தியது.
கிருமித்தொற்று அபாயமுள்ள நாடுகள் மற்றும் பகுதிகளிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் அனைத்து புதிய வெளிநாட்டு ஊழியர்களும் 14 நாள் இல்லத் தனிமை உத்தரவை பிரத்யேக வசிப்பிடங்களில் நிறைவேற்ற வேண்டும்.
‘சிராலஜி’ பரிசோதனையில் முன்பு கிருமித்தொற்று பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தவர்களும் இல்லத் தனிமை உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்று மனிதவள இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்தார்.
வெளிநாட்டிலிருந்து வந்த ஊழியர்களுக்கு நடத்தப்படும் கொவிட்-19 பரிசோதனையில் தொற்று இல்லை எனத் தெரியவந்தவுடன் தற்காலிக தங்குமிடத்தில் கூடுதல் ஏழு நாள் பரிசோதனை முறைக்கு ஊழியர்கள் உட்படுத்தப்படுவர். அங்கிருந்து வெளியேறும் முன்னர் மேலும் ஒரு கொவிட்-19 ‘பிசிஆர்’ சோதனை அவர்களுக்கு நடத்தப்படும்.
இதற்கு முன்பு பிரத்யேக வசிப்பிடங்களில் நான்கு நாட்கள் மட்டுமே ஊழியர்களில் சிலர் தங்க வேண்டியிருந்தது. அதற்கு பின்னர் விரைவாக கட்டப்பட்ட தங்குவிடுதிகளில் மீதமுள்ள இல்லத் தனிமை உத்தரவை ஊழியர்கள் நிறைவேற்றி வந்தனர். ஏழு நாள் பரிசோதனை முறையும் நடத்தப்பட்டது.
‘சிரோலஜி’ பரிசோதனையில் முன்பு தொற்று இருந்தது கண்டு அறியப்பட்டால் 14 நாள் இல்லத் தனிமை உத்தரவை முன்பு அவர்கள் நிறைவேற்ற தேவையில்லை.
ஆனால் புதிதாக வரும் வெளிநாட்டு ஊழியர்கள் இனி அட்டவணைப்படி வழக்கமான பரிசோதனை முறையைப் நிறைவேற்ற வேண்டும். அதன்படி இரு வாரங்களுக்கு ஒருமுறை அவர்களுக்கு கொவிட்-19 கிருமித் தொற்றுப் பரிசோதனை நடத்தப்படும்.