35 பேரிடம் கிருமித்தொற்று; அடுத்தடுத்து சந்தைகள் மூடல்
கிருமிப் பரவல் காரணமாக ஹேக் ரோடு, சொங் பாங் சந்தை மற்றும் உணவு நிலையங்கள் இன்று (ஜூலை 21) மூடப்பட்டன.
இவ்விரண்டு இடங்களிலும் 35 பேருக்குக் கிருமி தொற்றியதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை மூடி வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
கிருமிப் பரவலை முறியடிக்கவும் கிருமி நீக்க சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் இவை மூடப்படுவதாக சுகாதார அமைச்சு நேற்று இரவு தெரிவித்தது.
கிருமி தொற்றியதாக உறுதி செய்யப்பட்டவர்களில் இந்தச் சந்தைகளுக்குச் சென்றோரும் இவற்றில் பணியாற்றுவோரும் அடங்குவர்.
ஹேக் ரோடு சந்தை மற்றும் உணவு நிலையத்தில் 25 பேரும் சொங் பாங் சந்தை மற்றும் உணவு நிலையத்தில் 10 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சு கூறியது.
இதேபோல, சோங் பூன் சந்தை மற்றும் உணவு நிலையம் ஜூலை 18ஆம் தேதி மூடப்பட்டது. ஆகஸ்ட் 1 வரை அது மூடப்பட்டிருக்கும். இந்த இடத்திற்கு ஜூலை 3 முதல் ஜூலை 17 வரை சென்றவர்களுக்கு இலவச பரிசோதனைச் சாதனம் வழங்கப்பட்டது. சமூக அளவில் கிருமிப் பரவலைக் கண்டறிய இவ்வாறு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட சந்தைகளுக்குச் சென்றோர் தங்களது உடல்நிலையை 14 நாள்களுக்குக் கவனித்துக்கொள்ளுமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
கிருமிப் பரவல் அபாயத்தில் சிக்கிவிடாமல் இருக்க சந்தைகளுக்குச் செல்வோர் கூட்டங்களைத் தவிர்க்குமாறும் உச்சநேரங்களைத் தவிர்க்குமாறும் அது ஆலோசனை கூறியுள்ளது.