நான் நலமாக உள்ளேன்: ‘ஓமிக்ரான்’ தொற்றிய மருத்துவர்
‘ஓமிக்ரான்’ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பெங்களூரு மருத்துவர், தாம் நலமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து இப்போது மீண்டு வருவதாக 'தி நியூஸ் மினிட்' ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இந்நிலையில், அந்த மருத்துவரை எவ்வாறு கிருமி தொற்றியது என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.
அண்மையில், இந்தியாவில் இரண்டு பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. அந்த இருவரில் பெங்களூரு மருத்துவமனையில் பணியாற்றும் மேற்கூறப்பட்ட மருத்துவரும் ஒருவர்.
கடந்த நவம்பர் 18ஆம் தேதி பெங்களூரில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் அவர் பங்கேற்று இருந்தார். வெளிநாடுகள், வெளிமாநிலங்களைச் சேர்ந்த பல மருத்துவர்கள் அதில் கலந்துகொண்டனர்.
நவம்பர் 20ஆம் தேதி மாநாடு முடிவடைந்த நிலையில், அதற்கு மறுநாளே அந்த மருத்துவருக்கு நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின. அதையடுத்து, அவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாநாட்டில் பங்கேற்றவர்கள் மூலம் அந்த மருத்துவரைக் கிருமி தொற்றியிருக்கக்கூடும் என்று சுகாதாரத் துறையினர் கருதுகின்றனர்.
எனினும், கிருமித்தொற்று ஏற்பட்டு குறைந்தபட்சம் ஐந்து நாள்கள் கடந்த பிறகே அறிகுறிகள் தென்படும். ஆனால், அம்மருத்துவருக்கு எப்படி ஒரே நாளில் அறிகுறிகள் தோன்றின என்பது குறித்து நிபுணர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
அந்த மருத்துவர் அண்மையில் வெளிநாடு செல்லவும் இல்லை. எனவே, வேறெந்த வகையில் அவருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கும் என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
பெங்களூரு மருத்துவமனையில் அம்மருத்துவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 60 படுக்கைகளுடன் அம்மருத்துவமனையின் ஒரு தளம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த மருத்துவரின் மனைவி, மகளும் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தற்போது ஆறு பேர் அந்தச் சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
"பாதிக்கப்பட்ட பெங்களூரு மருத்துவர் இப்போது நலமாக இருப்பதாகக் கூறுகிறார். நாங்கள் நண்பர்கள். கொரோனா தொற்றுக்கு முன்பு எப்படி சிகிச்சை அளித்தோமோ, அப்படித்தான் ஓமிக்ரான் பாதிப்புக்கும் சிகிச்சை அளிக்கிறோம். மருத்துவர் உட்பட அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் சுவாசப் பிரச்சினை உள்பட வேறு எந்தவித பாதிப்பும் இல்லை," என்றார் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்.
ஓமிக்ரான் பிரிவில் பணியாற்றும் தாதியர் மற்றும் மருத்துவர்கள், அம்மருத்துவமனையின் பிற பகுதிகளுக்குச் செல்லக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.