பிரசவித்த சற்று நேரத்தில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறார் பெண் ஒருவர்.
ஓர் ஆறு, மூன்று நிலச் சரிவுகள் ஆகியவற்றைக் கடந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் மருத்துவமனைக்கு தாயையும் சேயையும் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. ஆற்றைக் கடக்கும்போது அந்தப் பெண்ணை அவரது கணவர் தூக்கிக்கொண்டு செல்ல வேண்டிய கட்டாயமும் இருந்தது.
கிராமத்தாரின் உதவியுடன் குடிமைத் தற்காப்புப் படையினர் இந்தப் பணியைச் செய்து முடித்தனர்.
மலேசியாவின் சாபா மாநிலத்தில் தொடரும் கனமழைப்பொழிவு காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கம்போங் மைஹாங் உலு பொங்காவான் பகுதிக்குச் செல்லும் சாலைகள் முற்றிலும் அடைபட்டுள்ளன.
நேற்று காலை சுமார் 7 மணியளவில், மருத்துவமனைக்குச் செல்ல இயலாத நிலையில் நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. வீட்டிலேயே பிரசவம் நிகழ்ந்த நிலையில், அந்தப் பெண்ணின் குடும்பத்தார் கிளினிக் டெசா டிபாபார் மருத்துவமனையைச் சேர்ந்த தாதி ஒருவரைத் தொடர்புகொண்டனர்.
எவ்லில் ப்ரிமஸ் எனும் அந்தத் தாதி பபார் நகரின் குடிமைத் தற்காப்புப் படையினரைத் தொடர்புகொண்டு தகவலைத் தெரிவித்து உதவி கோரினார்.
இரண்டு தாதியருடன் அந்த கிராமத்துக்கு குடிமைத் தற்காப்புப் படையினர் சென்று பார்த்தபோது பிரசவித்த பெண்ணின் உடல்நிலை சீராக இருந்தது. ஆனால் குழந்தையின் தொப்புள்கொடி இன்னும் தாயின் வயிற்றிலேயே இருந்தது.
உதவிக்குழுவினர் அந்த கிராமத்துக்குச் செல்லும்போது ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம், தாயையும் சேயையும் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குத் திரும்பியபோது சற்று வடிந்திருந்ததாகக் கூறப்பட்டது.
அந்த கிராமத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்திலிருக்கும் பொங்காவான் ஹெல்த் கிளினிக்குக்கு தாயையும் சேயையும் கிராமத்தாரின் உதவியுடன் கொண்டுசெல்ல உதவிக் குழுவினர் மாற்று வழியைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity