மங்கோலிய மாது அல்டான்டுயா கொலை வழக்கை மீண்டும் விசாரிப்பது குறித்து ஆராயப்போவதாக மலேசியாவின் தலைமைச் சட்ட அதிகாரியான டாமி தாமஸ் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்குடன் தொடர்புபடுத்தப்படும் அல்டான்டுயாவின் மரணத்திற்கு, நாட்டின் புதிய அரசாங்கம் நீதி தேடித்தரும் என நம்புவதாக அம்மாதின் தந்தை கூறியுள்ள வேளையில் டாமி தாமஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
நஜிப்பின் மெய்க்காப்பாளர்களாக இருந்த போலிஸ் படை சிறப்புப் பிரிவின் முன்னாள் அதிகாரிகள் இருவர், 2006ல் நடந்த அந்தக் கொலைச் சம்பவத்தில் குற்றவாளி கள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு மரணதண்டனையை எதிர்நோக்குகின்றனர்.
“அந்த இருவர் மட்டுமே குற்றவாளிகள் என்பது ஒத்துக்கொள்ள முடியாததாக உள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். அது முழுமை பெறாத கதையாக உள்ளது என்பதை அறிவோம்,” என்று கடந்த வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியொன்றில் திரு டாமி தாமஸ் கூறினார்.
இருவருக்கும் மரண தண்டனை விதித்த நீதிமன்றங்கள், கொலைக்கான அவர்களின் நோக்கம் குறித்து தெளிவில்லாமல் இருப்பதைச் சுட்டியுள்ளன. அதே நேரத்தில், மரண தண்டனையை எதிர்நோக்கும் இருவரில் ஒருவரான அஷீலா ஹாட்ரியின் அண்மைய வாக்குமூலம், கொலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்பதைச் சுட்டுவதாக திரு தாமஸ் கூறினார்.
மறு விசாரணையைக் கோரும் அஷீலா, தமது சத்தியப் பிரமாண வாக்குமூலத்தில் முன்னாள் பிரதமர் நஜிப்தான் வெளிநாட்டு உளவாளி என்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தார் என்பதாலும் அல்டான்டுயாவைக் கைதுசெய்து கொலைசெய்ய உத்தரவிட்டார் என்று கூறியுள்ளார்.
“போலிஸ் மேலும் விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன் பின்னரே வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்துவதா என்பது பற்றி முடிவெடுக்கப்படும்,” என திரு தாமஸ் தெரிவித்தார்.
வழக்கில் தாம் நிரபராதி என்றும் விசாரணைக்குத் தயார் என்றும் திரு நஜிப் கூறியுள்ளார்.