தைப்பூசத் திருவிழாவையொட்டி மலேசியாவின் பத்துமலை களைகட்டியது.
உலக நாடுகளை கொரோனா கிருமித் தொற்று அச்சுறுத்திய வரும் நிலையிலும் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தவும் நேர்த்திக் கடனைச் செலுத்துவோருக்கு ஆதரவாக இருக்கவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பத்துமலையில் இன்று (பிப்ரவரி 8) வெள்ளமெனத் திரண்டனர்.
மேள இசை முழங்க அலகுக் காவடி, பால் காவடி, பால்குடம் எனப் பல்வகை காவடிகளை ஏந்திக்கொண்டு பக்தர்கள் பத்துமலையின் 272 படிகளை ஏறினர்.
கொரோனா கிருமித் தொற்று மலேசியாவையும் பாதித்துள்ளபோதிலும் பத்துமலையில் தைப்பூசத் திருநாளுக்காக திரண்டிருந்தவர்களில் பலர் முகக்கவசம் அணிந்து கொள்ளவில்லை.
ஒருசில மலேசியர்களும் சுற்றுப்பயணிகள் மட்டும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
கொரோனா கிருமித் தொற்று மலேசியாவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எனவே முகக்கவசம் அணிய தேவையில்லை என்றும் பக்தர்கள் பலர் தெரிவித்தனர்.
பத்துமலையில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவைக் காண ஆஸ்திரேலியாவில் உள்ள தமது உறவுக்காரரை அழைத்து வந்தார் மலேசியரான லோ டீ சியூ.
கொரோனா கிருமித் தொற்று அபாயம் இருந்தும் கூட்டத்தோடு கூட்டம் நடந்து செல்வது பற்றி அவர் கவலைப்படவில்லை.
“கிருமி தொற்றிக்கொள்ளாமல் இருக்க நமது கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். மேலும் மற்றவர்களைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்,” என்றார் அவர்.
கூட்டத்தில் இருந்தபோதும் முகக்கவசம் அணியாதது தமக்குப் பதற்றத்தை ஏற்படுத்தவில்லை என நார்வே நாட்டவரான திரு எல்ஃப் மார்ட்டின் ஹோல்மெசல் தெரிவித்தார். ஆனால் தைப்பூசத் திருவிழாவை முதல்முறையாக நேரில் கண்ட தைவானியரான 21 வயது கேட் லோ, முகக்கவசம் அணிந்துகொண்டார்.
“முகக்கவசம் அணிந்துகொள்வதன் மூலம் நான் பாதுகாப்புடன் இருப்பதாக உணர்கிறேன்,” என்றார் அவர்.
#மலேசியா #தைப்பூசம் #பத்துமலை