சிங்கப்பூரில் உள்ள கட்டுமானம், கடல்துறை கப்பல் பட்டறை, உற்பத்தி ஆகிய துறைகளைச் சேர்ந்த எல்லா ஒர்க்பெர்மிட் ஊழியர்களுக்கும் செலுத்தப்பட வேண்டிய $250 வெளிநாட்டு ஊழியர் தீர்வை, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை தள்ளுபடி செய்யப்படுவதாக மனிதவள அமைச்சு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 21) தெரிவித்தது.
கொவிட்-19 கொள்ளைநோய் காரணமாக இந்தத் துறைகளில் எழுந்த சிரமங்களைத் தணிக்கும் நோக்கில் தீர்வை தள்ளுபடி சலுகை கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் இந்த சலுகைக்கான காலம் முடிவடைய இருந்த நிலையில் அது நீட்டிக்கப்படுகிறது.
மனிதவளப் பற்றாக்குறை, உயர்ந்துவிட்ட செலவு போன்றவற்றை எதிர்நோக்கும் இந்தத் துறைகளுக்கு உதவும் நோக்குடன் தள்ளுபடி நீட்டிக்கப்படுகிறது.
இவ்வாறு சலுகையை நீட்டிப்பதன் மூலம் சுமார் 15,000 நிறுவனங்கள் பலன்பெறும்.
தற்போதைய ஊழியர்களுக்கும் தொற்று அபாயம் குறைவாக உள்ள நாடு கள் அல்லது வட்டாரங்களில் இருந்து இனி வரவழைக்கப்படும் ஒர்க் பெர்மிட் ஊழியர்களுக்கும் இந்தத் தீர்வை தள்ளுபடியைப் பயன்படுத்திக்கொள்வது பற்றி முதலாளிகள் பரிசீலிக்கலாம்.
அண்மைய வாரங்களாக இந்தத் துறைகளுக்கு அதிக ஊழியர் வந்துகொண்டிருக்கும் நிலையில் நீட்டிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மேலும் ஒருமுறை நீட்டிக்க வேண்டிய தேவை இருக்குமா என்பது குறித்து 2022 மார்ச் நெருங்கும் சமயத்தில் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சு கூறியுள்ளது.
மேலும், பணிப்பெண்கள் உட்பட எல்லா வெளிநாட்டு ஊழியர்களுக்கும் அறிவிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர் தீர்வைக் கழிவும் அடுத்த ஆண்டு டிசம்பர் வரை நீட்டிக்கப்படுகிறது.
இவர்கள் சிங்கப்பூர் வந்தவுடன் இல்லத்தனிமை உத்தரவை நிறைவேற்றும் காலத்திற்கும் வெளிநாட்டு ஊழியர் அறிமுக நிகழ்ச்சிக்கான காலத்திற்கும் இந்த தீர்வைக் கழிவு அளிக்கப்படுகிறது.