டெக்.பாஸ் எனும் தொழில்நுட்பத் துறை ஊழியர் அனுமதி திட்டத்தின்கீழ், இவ்வாண்டு ஜனவரி முதல் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வரை, 150 பேருக்கு வேலை அனுமதி அட்டைகளை அரசாங்கம் வழங்கியுள்ளது. பொருளியல் வளர்ச்சிக் கழகம் இன்று (நவம்பர் 7) இதைத் தெரிவித்தது.
ஜனவரியில் தொடங்கிய டெக்.பாஸ் திட்டத்தை கழகம் நிர்வகிக்கிறது.
கடந்த மார்ச் மாதம் வரை இத்திட்டத்தின்கீழ் 22 பேருக்கும் ஜூலை வரை 90 பேருக்கும் வேலை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
டெக்.பாஸ் அட்டைகள் 24 நாடுகளைச் சேர்ந்த திறனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவர்களில் தொழில்முனைவர்கள், நிபுணர்கள் ஆகியோருடன் செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு, கல்வி சார்ந்த தொழில்நுட்பம், நிதித் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நிர்வாகிகளாக இருந்தவர்களும் அடங்குவர்.
தொழில்நுட்பத் துறை திறனாளர்களை சிங்கப்பூருக்கு ஈர்ப்பதே திட்டத்தின் குறிக்கோள்.
டெக்.பாஸ் திட்டத்தின்கீழ், ஈராண்டுகளுக்கு வேலை அனுமதி கிடைக்கும். தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால், மேலும் ஈராண்டுகளுக்கு வேலை அனுமதியைப் புதுப்பித்துக்கொள்ளலாம்.
டெக்.பாஸ் அட்டையைப் பெற்றவர்கள், சிங்கப்பூரில் ஒரு வர்த்தகத்தைத் தொடங்கி நடத்தலாம். இங்குள்ள நிறுவனங்களில் முதலீட்டாளராக, பங்குதாரராக அல்லது நிர்வாகக் குழு இயக்குநராக செயல்படலாம்.
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின்கீழ், 500 பேருக்கு தொழில்நுட்ப வேலை அனுமதி வழங்க இடமுண்டு.
பயணக் கட்டுப்பாடுகளால் தற்போது டெக்.பாஸ் அட்டையைப் பெற்ற 150 பேரில் சிலர் அண்மையில்தான் சிங்கப்பூர் வந்திருப்பதாகவும் மேலும் சிலர் வரத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் கூறியது.
மேலும், டெக்@எஸ்ஜி திட்டத்தில் செப்டம்பர் இறுதிவரை, நிதித் தொழில்நுட்பம், சுகாதாரப் பராமரிப்பு போன்ற துறைகளைச் சேர்ந்த 35 நிறுவனங்கள் இடம்பெற அரசாங்கம் அனுமதி வழங்கியிருப்பதாகவும் பொருளியல் வளர்ச்சிக் கழகம் கூறியது.
எம்பிளாய்மண்ட் பாஸ் என்ற வேலை அனுமதி அட்டைக்கு வெளிநாட்டு நிபுணர்கள் தகுதிபெற நீக்குப்போக்குள்ள விதிமுறைகளை இத்திட்டம் வகுத்துள்ளது.