தடுப்பூசி போட்டுக்கொண்ட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாளை மறுதினம் (நவம்பர் 10) முதல், ஐந்து பேராகச் சேர்ந்து உணவகங்களில் சாப்பிடலாம்.
இருந்தாலும், இந்த அனுமதி உணவங்காடிக் கடைகளுக்கும் காப்பிக்கடைகளுக்கும் பொருந்தாது.
கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு இன்று (நவம்பர் 8) இந்த அறிவிப்பை வெளியிட்டது.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், படிப்படியாகப் பொருளியல் திறந்துவிடப்படும் நிலையில், கொவிட்-19 தொற்று அதிகரிக்கக்கூடிய ஒரு நிலை தவிர்க்க இயலாதது என்றார்.
இதன் காரணமாகவே, தடுப்பூசி போட்டவர்களுக்கும் போடாதவர்களுக்கும் இடையில் வேறுபட்ட ஏற்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்பு முறைக்குச் சுமை அளவுக்கு அதிகமாக கூடிவிடுவதைத் தடுக்கும் வகையில், இப்போதைய கட்டுப்பாடுகளைத் தளர்த்த மிகவும் கவனமான, படிப்படியான அணுகுமுறை இடம்பெறுகிறது என்று அவர் விளக்கினார்.
இதற்கிடையே, சமூகத்தினர் இன்னமும் இரண்டு பேர் வரைதான் ஒன்றுகூட முடியும். குடும்பத்தினர் நாள் ஒன்றுக்கு இரண்டு வருகையாளர்களை மட்டுமே அனுமதிக்க முடியும். ஒரே குடும்பத்தைச் சேராதவர்கள் அதிகபட்சமாக இரண்டு பேர் மட்டுமே சேர்ந்து வெளியே உணவு உண்ண முடியும்.
விதிகளை மீறும் தனிப்பட்டவர்களும் கடைகளும் கடுமையான அமலாக்க நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
குற்றம் புரிவோருக்கு அபராதம் விதிக்கப்படும். விதிமீறும் உணவு, பானக் கடைகள் உடனடியாக மூடப்பட வேண்டிய நிலைமை ஏற்படும். முதல் தடவை குற்றம் புரிவோருக்கும் தண்டனை உண்டு என்று அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.