புத்தாண்டு தினமான நேற்று, ஆடவர் ஒருவரை ஆணிகள் கொண்ட மரப்பலகையால் தாக்கி மரணம் விளைவித்ததாக, வெளிநாட்டு ஊழியர் ஒருவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு வேண்டுமென்றே மற்றொருவரைக் கடுமையாக தாக்கியதாக இந்திய நாட்டவரான பன்னீர் வெற்றிவேல், 26, என்பவர்மீது ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 2) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நேற்று ஜனவரி 1ஆம் தேதி பின்னிரவு 1 மணிக்கும் 1.25 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், திரு ராஜேந்திரன் சண்முகசுந்தரன், 37, என்பவரை பன்னீர் மரப்பலகையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
எண் 20 உட்லண்ட்ஸ் இன்டஸ்ட்ரியல் பார்க் இ1 அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அங்குள்ள தங்குவிடுதி ஒன்றில் இரு ஆடவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
பின்னிரவு 1.25 மணியளவில் அந்தத் தகராறு குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. திரு ராஜேந்திரன், தலையில் காயங்களுடன் தரையில் அசைவின்றி கிடந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கைது செய்யப்பட்ட பன்னீர், கூடுதல் விசாரணைக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜனவரி 7ஆம் தேதி அவரது வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.