மிலெனியா கல்விக்கழகத்தில் பயின்றுகொண்டிருந்தபோது தான் கருவுற்றிருந்ததை அறிந்தார் அஷ்வினி அண்ணாதுரை. இதை முற்றிலும் எதிர்பாராத இவர், தாயாரிடம் நிலைமையை எடுத்துக்கூறியபோது, இரட்டைக் குழந்தைகளைப் பெற்று எடுத்துக்கொள்ளத் தான் ஆதரவளிப்பதாக ஆறுதல் கூறினார்.
ஆனாலும், கல்வியை நிறுத்திவிட்டு பிள்ளைப்பேற்றில் கவனம் செலுத்தவேண்டிய நிலை.
சிறுவயதிலிருந்து கல்வியில் ஆர்வம் கொண்டிருந்த அஷ்வினி தொடக்கக் கல்லூரி வாழ்க்கையில் சந்தித்த இன்னல்கள் ஏராளம். முழுநேர ‘ஏ’ நிலை மாணவராக இருந்த அதே வேளையில், பகுதிநேரப் பணியாளராகவும் இரு பெண் குழந்தைகளுக்குத் தாயாராகவும் திகழ்ந்தார் அஷ்வினி, 23.
மேல்நிலைத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 22) வெளியான நிலையில் அனைத்து ‘ஹெச்2’ பாடங்களிலும் ‘ஏ’ தரநிலையுடன் 88.75 புள்ளிகள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார் அஷ்வினி.
குடும்ப உறுப்பினர்கள் மட்டுமின்றி, தன் காதலரும் உறுதுணையாக இருந்து, பின்னர் தன்னை மணந்துகொண்டதாகக் கூறினார் அஷ்வினி. இருவரும் முழுநேர வேலை செய்து தங்கள் பிள்ளைகளுக்கான செலவுகளைக் கவனித்துக்கொள்கின்றனர்.
மகப்பேற்றுக் காலத்தில் தம் தாயாரைப் போலவே, தமது குடும்பத்தில் இருந்த பெண்கள் அனைவரும் தமக்குப் பேராதரவு அளித்ததாக அஷ்வினி குறிப்பிட்டார்.
“குறைந்த வருமானக் குடும்பத்தில் மேலும் இரு குழந்தைகளை வளர்ப்பது கடினமாக இருந்தது. படித்துக்கொண்டே குழந்தைகளைப் பராமரித்ததும் பள்ளிக்கடமைகளைச் சமாளித்ததும் மனவுளைச்சல் தந்தது. ஆனால், பள்ளிச் சமூகம் எனக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்தது,” என்றார் அஷ்வினி.
ஓராண்டு இடைவேளைக்குப்பின் மூன்றாம் ஆண்டில் சேர்ந்த அஷ்வினிக்கு, நண்பர்களும் ஆசிரியர்களும் தன்னை ஏற்றுக்கொள்வார்களா என்ற அச்சம் இருக்கவே செய்தது.
மாறாக, அஷ்வினியின்மேல் அவர்கள் அதிக அளவில் அன்பைப் பொழிந்தனர். இவருடைய பிள்ளைகளுக்காக விளையாட்டுப் பொருள்கள் வாங்கிக்கொடுத்து, இவரது மகள்களின் நலனையும் பேணினர்; பள்ளிப் பாடங்களில் அஷ்வினி எதிர்கொண்ட சிரமங்களைக் களையவும் உதவினர்.
மேலும், வகுப்பு ஆசிரியர்களும் தமக்குப் பக்கபலமாக இருந்ததாக அஷ்வினி கூறினார்.
“எத்தனை சவால்கள் வந்தாலும் அஷ்வினி கல்விக்கும் சமூகப் பணிக்கும் தன்னை அர்ப்பணித்திருந்தாள். அவள் தொடர்ந்து படிப்பில் முன்னேறினாள். அவளது நம்பிக்கை அசாத்தியமானது,” என்றார் அஷ்வினியின் உயிரியல் பாட ஆசிரியர்.
இளம் தாயாக அஷ்வினி எதிர்கொண்ட போராட்டங்கள் சொல்லிலடங்கா. தன் முயற்சியைக் கைவிடும் எண்ணம் பலமுறை குறுக்கிட்டதாக இவர் சொன்னார்.
ஆனாலும், அப்போதெல்லாம் தன் குழந்தைகளின் பிஞ்சுமுகங்களே தனக்குப் போராடும் மன உறுதியை அளித்ததாக நெகிழ்ச்சியுடன் சொன்னார் அஷ்வினி.
கருவுற்றிருந்த வேளையில் அஷ்வினிக்கு ஆதரவளித்த மருத்துவர்கள், மருத்துவராகவேண்டும் என்ற இவரது இலட்சியத்துக்கு வித்திட்டனர். குழந்தைகள் அல்லது மகப்பேற்று மருத்துவராக விரும்புகிறார் அஷ்வினி. இப்போது ஏடென் பள்ளியில் மனநலம்
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான உதவி ஆசிரியராகப் பணியாற்றி வரும் அஷ்வினி, தொடர்ந்து இந்தச் சமூகத்திற்கு உதவவும் எண்ணம் கொண்டுள்ளார்.