இந்தியா: ஜனவரி-பிப்ரவரி மாதம் ஓமிக்ரான் பரவல் வேகமெடுக்கக்கூடும்
இந்தியாவில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நாடு முழுவதும் ஓமிக்ரான் பாதிப்பு மிக வேகமாக அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும், ஓமிக்ரான் பரவல் வேகம் டெல்டா வகையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், பாதிக்கப்பட்டோரிடம் இலேசான தொற்று அறிகுறிகள் மட்டுமே தென்படக்கூடும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ள நிலையில், இந்திய சுகாதாரத்துறை அதிகாரிகளும் இக்கூற்றை ஏற்றுக்கொள்வதாக அந்த ஊடகச் செய்தி மேலும் கூறுகிறது.
இந்நிலையில், இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசிகளைப் போடுவதே தங்களின் முதல் இலக்கு என்று தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள், இதன்மூலம் கடுமையான நோய் பாதிப்பில் இருந்தும் உயிரிழப்பில் இருந்தும் மக்களைக் காக்க முடியும் என்றும் கூறியுள்ளனர்.
ஓமிக்ரான் தொற்று குறித்து பதற்றமடைய தேவையில்லை என்றும் அதன் பரவலைக் கட்டுப்படுத்துவதிலேயே கவனம் இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.