மலேசியாவில் இரண்டாவது நபருக்கு ஓமிக்ரான் தொற்று
மலேசியாவில் இரண்டாவது நபரிடம் கொவிட்-19 ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நைஜீரியாவில் இருந்து தம்முடைய குடும்பத்தாருடன் மலேசியா திரும்பிய எட்டு வயதுச் சிறுமிக்குத் தொற்று உறுதியானது.
மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் இதனைத் தெரிவித்தார். மேலும், திரிபு வகையைக் கண்டறிய, 18 பேரிடமிருந்து பெறப்பட்ட பரிசோதனை மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவற்றின் முடிவுகள் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 17) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தச் சிறுமி, அவரது தாயார் மற்றும் உடன்பிறப்புடன் டிசம்பர் 5ஆம் தேதி மலேசியா வந்திறங்கியதாக திரு கைரி சொன்னார். கத்தார் தலைநகர் தோஹா வழியாக அவர்கள் மலேசியா சென்றனர்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கியவுடன் அவர்களுக்கு இரண்டாவது ஆர்டி-பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பிறகு அவர்கள் தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டனர்.
இரண்டு நாள்கள் கழித்து டிசம்பர் 7ஆம் தேதி, அந்த இரண்டாவது ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் அச்சிறுமிக்குத் தொற்று உறுதியானது. அவர் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக டிசம்பர் 14ஆம் தேதி உறுதியானது.
அந்தச் சிறுமியிடம் தொற்றுக்கான அறிகுறி எதுவும் இல்லை. டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி 14 நாள்களுக்கு அவர் இல்லத் தனிமையில் வைக்கப்பட்டார்.
“அந்தச் சிறுமியின் தாயார், சகோதரி, தந்தை மற்றும் அவர்களை விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு ஓட்டிச் சென்ற டாக்சி ஓட்டுநரும் அச்சிறுமியின் நெருங்கிய தொடர்புகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்,” என்றார் திரு கைரி.
அச்சிறுமியின் தாயாரும் சகோதரியும் மலேசியா வந்திறங்கியவுடனும் வந்திறங்கிய ஐந்தாவது மற்றும் 11வது நாளிலும் நடத்தப்பட்ட பரிசோதனையில் ‘தொற்று இல்லை’ எனத் தெரியவந்தது. அவர்களிடமும் தொற்றுக்கான அறிகுறி எதுவும் இல்லை.