கொவிட்-19 தொற்று அபாயமுள்ள நாடுகளில் இருந்து நீங்கள் இந்தியா செல்கிறீர்கள் என்றால், அங்குள்ள விமான நிலையம் ஒன்றுக்கு வந்திறங்கியவுடன், கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருப்பது குறித்த கவலை உங்களுக்கு இருக்கலாம்.
ஆனால், ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்காக நீண்ட வரிசையைத் தவிர்க்க ஒரு வழி இருக்கிறது. கூடுதல் கட்டணம் செலுத்துவதே அந்த வழி.
இரு வகை ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் உள்ளன. ஒன்று, விரைவு ஆர்டிபிசிஆர் பரிசோதனை. மற்றொன்று, வழக்கமான ஆர்டிபிசிஆர் பரிசோதனை.
விரைவு ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவுகளை ஒரு மணிநேரத்திலேயே தெரிந்துகொள்ளலாம். மாறாக, வழக்கமான ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவு வெளிவர குறைந்தபட்சம் நான்கு மணிநேரம் ஆகும்.
ஆனால், பரிசோதனை முடிவுகளை விரைவில் தெரிந்துகொள்ள கூடுதல் கட்டணம் பொருந்தும். விரைவு ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கான கட்டணம் ரூ.3,900. வழக்கமான ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கான கட்டணம் ரூ.500.
நான்கு பேர் கொண்ட குடும்பமாக நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால், விரைவு பரிசோதனைக்கு ரூ.15,600யும் வழக்கமான பரிசோதனைக்கு ரூ.2,000யும் செலுத்த வேண்டும்.
ஆனால், விமான நிலையத்துக்கு விமானம் நிலையம் இந்தக் கட்டணம் வேறுபடலாம்.
டெல்லி அனைத்துலக விமான நிலையத்தில் கொவிட்-19 பரிசோதனை நடத்தும் ‘ஜீன்ஸ்ட்ரிங்ஸ் டைக்னாஸ்டிக்ஸ்’ நிறுவனம், பரிசோதனை ஆற்றலை அதிகப்படுத்த முயற்சி செய்து வருவதாக அதன் துணைத் தலைவர் டாக்டர் அல்பனா ரஸ்டன் தெரிவித்தார்.
“தற்போது, ஓர் இரவில் நாங்கள் 1,500க்கும் மேற்பட்ட பரிசோதனை மாதிரிகளைக் கையாளுகிறோம். அதேவேளையில், பரிசோதனை முடிவு வெளிவருவதற்கான நேரத்தைக் குறைக்க நாங்கள் முற்படுகிறோம். அதாவது, பரிசோதனை முடிவு வெளியாக 6 மணிநேரம் தேவைப்படுகிறது. அதை 4 மணிநேரமாகக் குறைக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்,” என்று விளக்கினார் அவர்.
தொற்று அபாயமுள்ள நாட்டில் இருந்து ஒருவர் இந்தியா வருமானால், விமான நிலையத்தில் பரிசோதனை முடிந்தவுடன் ஓரிரு வாரத்திற்கு இல்லத் தனிமை உத்தரவை நிறைவேற்ற வேண்டும்.
எனினும், வெவ்வேறு மாநிலங்கள் வெவ்வேறு தனிமை உத்தரவு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
* பின்குறிப்பு: இச்செய்தி, ‘இந்தியா டுடே’ ஆங்கில செய்தித் தளத்தில் வெளிவந்தது. இந்தியா செல்லவிருக்கும் எமது வாசகர்களின் சொந்த தகவலுக்காக இச்செய்தியை நாங்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்துள்ளோம்.