சிங்கப்பூரில் எதிர்வரும் ஜூன் 1ஆம் தேதி முதல், அதிகமானோர் வந்துசெல்லும் இடங்களுக்குள் நுழைய ‘டிரேஸ் டுகெதர்’ செயலி அல்லது கருவியை மட்டுமே பயன்படுத்த முடியும்.
கடைத்தொகுதிகள், வேலையிடங்கள், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், கல்வி நிலையங்கள், உணவு, பானக் கடைகள், உடற்பயிற்சிக்கூடங்கள் உள்ளிட்டவை அந்த இடங்களில் அடங்கும். அந்த இடங்களில் ஏற்கெனவே ‘சேஃப்என்ட்ரி’ மின்னிலக்க பதிவுமுறை நடப்பில் இருந்து வருகிறது.
சிங்கப்பூர் மக்கள் தொகையில் 90 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் ‘டிரேஸ் டுகெதர்’ செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர் அல்லது கருவியைப் பெற்றுக்கொண்டு உள்ளனர் என்று அறிவார்ந்த தேச, மின்னிலக்க அரசாங்க அலுவலகமும் சுகாதார அமைச்சும் இன்று (ஏப்ரல் 22) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
கைபேசி கேமராவைக் கொண்டு ‘சேஃப்என்ட்ரி கியூஆர்’ குறியீட்டை வருடுவது அல்லது ‘சிங்பாஸ்’ செயலியைக் கொண்டு நுழைவைப் பதிவு செய்வது போன்ற பதிவுசெய்யும் முறை ஜூன் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படும்.
‘டிரேஸ் டுகெதர்’ மூலம் வருகையைப் பதிவுசெய்யும்போது பெரிய கடைத்தொகுதிகளில் உள்ள பேரங்காடிகள், பகுதிவாரிக் கடைகள் உள்ளிட்ட தனித்தனி கடைகளுக்குள் நுழைய ஏற்கெனவே ‘சேஃப்என்ட்ரி’ மூலம் வருகையைப் பதிவுசெய்யும் நடைமுறையும் நீக்கப்படும்.
‘டிரேஸ் டுகெதர்’ மூலம் வருகையைப் பதிவுசெய்யும் முறைக்கு கட்டாயமாக்கப்படாத இடங்கள், ஏற்கெனவே ‘சேஃப்என்ட்ரி’ மூலம் வருகையைப் பதிவுசெய்யும் ஏற்பாட்டை நிறுத்த வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை ஏற்படுத்தித் தருவதே இதன் நோக்கம். மருந்துக்கடைகள், பல்பொருள் அங்காடிகள், வீடமைப்பு வளர்ச்சிக் கழக பேட்டைகளில் அமைந்துள்ள சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளிட்டவை அத்தகைய இடங்களில் அடங்கும்.
‘டிரேஸ்டுகெதர்’ கருவியை இன்னும் பெற்றுக்கொள்ளாதவர்கள் தீவு முழுவதும் உள்ள சமூக மன்றங்களில் அதைப் பெற்றுக்கொள்ளலாம். இதுகுறித்த மேல்விவரங்களுக்கு token.gowhere.gov.sg எனும் இணையப்பக்கத்திற்குச் செல்லலாம்.