கொவிட்-19 தொடர்பான தளர்த்தப்பட்ட விதிமுறைகள் இன்று நடப்புக்கு வந்தன. இன்று முதல் வெளிப்புறத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை.
இருப்பினும் லிட்டில் இந்தியாவுக்கு வருகையளித்த பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்திருந்தனர். தமிழ் முரசிடம் பேசிய அவர்கள் வெளிப்புறத்தில் தொடர்ந்து முகக்கவசம் அணிவர் என்று கூறினர்.
தங்களையும், தொற்றுப் பாதிப்பு ஏற்படும் அதிக அபாயம் உள்ள தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசத்தைத் தொடர்ந்து அணியவிறுப்பதாக சிலர் குறிப்பிட்டனர்.
“எனக்கு ஒரு வயதில் ஒரு மகனும் வீட்டில் வயதான பெற்றோர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்குக் கிருமி தொற்றும் அபாயம் அதிகமாக இருக்கிறது. வேலைக்கும், வெளியே செல்லும் நாம் அவர்கள் பாதுகாப்பைக் கருதி தொடர்ந்து முகக்கவசத்தை அணிவேன்,” என்றார் 31 வயதான தாதியர் சிந்து சுசிலா.
தளர்த்தப்ப்டட விதிமுறைகளை வரவேற்றாலும், தொற்றுப் பாதிக்கும் அபாயம் இன்னும் நிலவுகிறது. அதனால், தொடர்ந்து முகக்கவசம் அணியப்போவதாக சிலர் கூறினர்.
“முகக்கவசம் அணிவது நம்முடை பாதுகாப்புக்காக. அரசாங்கம் கட்டுப்பாடுகளை எளிமைபடுத்தினாலும், நாம் தொடர்ந்து முகக்கவசம் அணியது அனைவருரையும் பாதுகாக்கும்,” என்று சொன்னார் விளம்பரத் துறையில் பணிபுரியும் நடராஜன்.
கடந்த ஈராண்டுகளாக முகக்கவசம் அணிந்துவருவதால், சிலருக்கு அது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது.
“இந்தப் பழக்கத்தைச் சட்டென்று மாற்றுவது கடினம். ஓரிரு வாரங்கள் கழித்து, சூழ்நிலை சற்று சீராக இருந்தால், முகக்கவசம் அணியமால் வெளியே செல்ல எனக்குத் தயக்கம் இருக்காது. தற்போது முகக்கவசத்தைத் தொடர்ந்து அணிய விரும்புகிறேன்,” என்று குறிப்பிட்டார் 39 வயதான தீபக் ஜேசன்.
லிட்டில் இந்தியாவுக்கு வந்திருந்த ஒரு சிலரே முகக்கவசம் அணியவில்லை. அவர்களில் ஒருவர் இயந்திர பராமரிப்புப் பணியாளரான 25 வயது கவுஷார் ஷெய்க்.
“முகக்கவசம் அணியும்போது எனக்கு மூச்சு முட்டுகிறது. அதை நீக்கியப்பின் மூச்சுவிடுவது சுலபமாக உள்ளது. சிங்கப்பூரில் பெரும்பாலோர் தடுப்பூசிப் போட்டுக்கொண்டுள்ளனர். அதனால் முகக்கவசத்தை நம்பிக்கையோடு அகற்றலாம்,” என்றார் கவுஷார்.
தனிநபர் பாதுகாப்பைக் கருதி வெளிப்புறங்களில், குறிப்பாக கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் முகக்கவசத்தைத் தொடர்ந்து அணிய சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.